செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

இனி இப்படியும் வேலை தேடலாம்! :நேர்காணலில் பங்கேற்க உதவும் செயலி

வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலிகளும் , வேலைவாய்ப்பு நேர்க்காணலுக்கு தயாராக உதவும் செயலிகளும் இருக்கின்றன. இப்போது வேலைவாய்ப்பிற்கான நேர்காணலில் பங்கேற்க உதவும் செயலி அறிமுகமாகி இருக்கிறது.
‘இ-பாய்ஸ்’ எனும் இந்த செயலி மூலம் வேலை தேடுபவர்கள்’ தாங்கள் விண்ணப்பிக்கும் நிறுவனங்களுடன் நேரடியாக நேர்க்காணலில் பங்கேற்கலாம்.
வழக்கமாக வேலை வாய்ப்பு நாடும் இளைஞர்கள், முதலில் தங்களுக்கு பொருத்தமான வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களை தேர்வு செய்து விண்ணப்பிப்பார்கள். அதன் பிறகு அந்த நிறுவனங்களிடம் இருந்து நேர்க்காணலுக்கான
அழைப்பு வர காத்திருக்க வேண்டும். இந்த காத்திருப்புக்கான அவசியத்தை நீக்கி, நேரடியாக நேர்க்காணலில் பங்கேற்க வழி செய்கிறது இ-பாய்ஸ் செயலி.
வேலை தேடுபவர்கள் முதலில் இந்த செயலியை டவுண்லோடு செய்து, தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு இந்த தளத்தில் உள்ள நிறுவன வேலைவாய்ப்புகளில் தங்களுக்கு பொருத்தமானதை தேர்வு செய்ய வேண்டும்.
இந்த செயலியில் பதிவு செய்துள்ள நிறுவனங்கள் தங்களுக்கான நேர்க்காணல் கேள்விகளை சமர்ப்பித்துள்ளன. எனவே விண்ணப்பித்தவுடன், இந்த கேள்விகளுக்கு பதில் அளித்து நேர்க்காணலில் பங்கேற்கலாம். ஆடியோ மற்றும் வீடியோவில் பதில்கள் பதிவாகும்.
நிறுவனம் பின்னர், இந்த வீடியோ நேர்க்காணலை பரிசீலித்து அதனடிப்படையில் தொடர்பு கொள்ளும். இந்த நேர்க்காணல் முதல் கட்டமாகவே அமையும். தேர்வு செய்யப்படுபவர்களை அடுத்த கட்டதேர்வுக்கு அழைத்து பரிசீலனை செய்யும். எனினும் வேலை தேடுபவர்கள் மற்றும் வேலைக்காக தகுதியானவர்களை நியமிக்க விரும்பும் நிறுவனங்கள் என இருதரப்பினருக்குமே இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும்.
வேலை தேடுபவர்களை பொருத்தவரை அழைப்பிற்கு காத்திருக்காமல், தங்களுக்கு விருப்பமான நேரத்தில் விரும்பிய இடத்தில் இருந்து நேர்க்காணலில் பங்கேற்கலாம்.மேலும் நேர்க்காணலுக்கு அழைக்கப்பட்ட நேரம் பொருத்தமானதுதானா? என்பது பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. பயணம் செய்யவும் தேவையும் இல்லை.
நிறுவனங்களை பொறுத்தவரை, தகுதியான நபர்களை தேர்வு செய்ய ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்களை பரிசீலித்து, அவர்களில் பலரை நேர்முகத்தேர்வுக்கு அழைத்து வடிகட்டி தேர்வு செய்யும் தேவை இல்லாமல், விண்ணபித்தவர்களின் தகுதியை நேர்க்காணல் மூலம் மதிப்பிட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.
சச்சின் அகர்வால் மற்றும் பிஷன் சிங் ஆகிய தொழில்முனைவோர் இந்த செயலியை உருவாக்கியுள்ளனர்.
சாப்ட்வேர் நிறுவனங்களுக்கான அமைப்பான நாஸ்காமின் ‘இளம் ஸ்டார்ட் அப்கள்’ திட்டத்தில் இந்த செயலி தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேலை வாய்ப்பை நாடுபவர்கள் இந்த செயலியை முயற்சி செய்து பார்க்கலாம்.
செயலி இணையதளம்; http://www.epoise.com/

0 கருத்துகள்:

கருத்துரையிடுக