ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

கிள்ளை : தவறான சிகிச்சையால் பெண் சாவு ,போலி டாக்டருக்கு போலீஸ் வலை

பரங்கிப்பேட்டை:கிள்ளையில் உள்ள ஒரு தனியார்மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் திடீரென இறந்தார். எம்.பி.பி.எஸ். படிக்காமல் அந்த பெண்ணுக்கு மருத்துவம் பார்த்த பெண் போலி டாக்டரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே கிள்ளை நாடார் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நாகேஸ்வரி (வயது 45). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகேஸ்வரி அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு மல்லிகா என்ற பெண் டாக்டர் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.


பின்னர் வீடு திரும்பிய ஒரு மணிநேரத்தில் நாகேஸ்வரியின் உடலில் ஆங்காங்கே கொப்பளங்கள் வந்துள்ளது. இதனால் அவரது உடல் நிலை நிலை மேலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவமனையில் நாகேஸ்வரி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் நாகேஸ்வரி, மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நாகேஸ்வரி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.
போலீசில் புகார்
இது குறித்து நாகேஸ்வரியின் உறவினர்கள் கிள்ளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரில், கிள்ளை மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால்தான் நாகேஸ்வரி இறந்துள்ளார். எனவே நாகேஸ்வரிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மல்லிகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் டாக்டர்தானா என்பது எங்களுக்கு சந்தேகமாக உள்ளது. எனவே அவரிடம் விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலி டாக்டருக்கு வலைவீச்சு
விசாரணையில், நாகேஸ்வரிக்கு சிகிச்சை அளித்தது கிள்ளை பிச்சாவரம் சாலையை சேர்ந்த நாகராஜன் மனைவி மல்லிகா என்பதும், அவர் எம்.பி.பி.எஸ். படிக்காமல் நாகேஸ்வரிக்கு சிகிச்சை அளித்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்வதற்காக போலீசார், மல்லிகாவின் வீட்டுக்கு சென்றனர். இதையறிந்த மல்லிகா தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். போலி டாக்டர் சிகிச்சை அளித்த பெண் இறந்த சம்பவம் கிள்ளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக