வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பாக மோடிக்கு எதிராக சாட்சியம் அளித்த ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்ஜீவ் பட் பணிநீக்கம்

அகமதாபாத் : குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை வழக்கில் நரேந்திரமோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த காரணத்தால் பழிவாங்கப்பட்ட ஐ.பி.எஸ்.அதிகாரி சஞ்சீவ்பட்டை பணியிலிருந்தே நீக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து அவசரமாக கூட்டிய கூட்டத்தில் இந்துக்கள் முஸ்லிம்களுக்கு எதிரான தங்களது கோபத்தை வெளியிட அனுமதிக்கவேண்டும் என்று மோடி உத்தரவிட்டதாக சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம்
தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து மோடி அரசு, சஞ்சீவ் பட்டை பழிவாங்கும்விதமாக துறைசார்ந்த விசாரணைக்கு உள்படாதது, அனுமதியின்றி விடுமுறையில் சென்றது, காவலர் பயிற்சிப் பள்ளித் தலைவராக இருந்தபோது அலுவலக வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியது, ஒரு பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்தது போன்ற காரணங்களைக் கூறி சஸ்பெண்ட் செய்தது. சஸ்பெண்ட் செய்யப்பட்டு ஓராண்டு முடிந்த நிலையில், மத்திய உள் துறையின் மறு ஆய்வுக் குழு இவரது சஸ்பெண்ட் உத்தரவை மறு ஆய்வு செய்தது. அப்போது இவரது சஸ்பெண்டை நீட்டிக்கத் தேவையில்லை என அக்குழு முடிவெடுத்தது. இது குஜராத் மாநில அரசுக்குத் தெரிவிக்கப்பட்டது. மத்திய உள் துறையின் இந்தப் பரிந்துரையை குஜராத் மாநில ஏற்றுக்கொண்டது. ஆயினும், மேலும் இரு குற்றச்சாட்டுகளுக்காக சஞ்சீவ் பட் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்ததால், அவர் உடனடியாகப் பணிக்குத் திரும்ப முடியாத சூழல் நிலவியது. இந்நிலையில், சஞ்சீவ்பட்டை பணியிலிருந்தே நீக்கி அதிரடி உத்தரவு பிறப்பித்து பழி 
வாங்கியுள்ளது ஆளும் பா ஜ க குஜராத் மற்றும் மத்திய அரசு.

இது தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்ஜீவ் பட் தனது டுவிட்டர் பக்கத்தில், “27 ஆண்டுகளுக்குப் பிறகு, இறுதியாக இந்திய காவல் பணியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டேன். எனவே வேலை இருந்தால் சொல்லுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக