ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

மெளலானா அபுல்கலாம் ஆசாத் கல்வி உதவித்தொகை: சிறுபான்மையின மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

கடலூர்:சிறுபான்மையின மாணவிகள் மெளலானா அபுல்கலாம் ஆசாத் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கல்வியில் சிறந்து விளங்கி வசதியின்றி கல்வியினைத் தொடர சிரமப்படும் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த மாணவிகளுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு மெளலானா அபுல்கலாம் ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
 இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் வசிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், ஜெயின் மற்றும் பார்சி மதங்களைச் சார்ந்த 11ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு ரூ.12 ஆயிரம் கல்வி உதவித்தொகை இரு தவணைகளில் வழங்கப்படுகிறது. 11ஆம் வகுப்பிற்கு ரூ.6 ஆயிரமும், 12ஆம் வகுப்பிற்கு ரூ.6
ஆயிரமும் வழங்கப்படுகிறது.
  கல்வி உதவித்தொகை, கல்விக் கட்டணம், பாடப் புத்தகம், எழுதுபொருள்கள் உள்ளிட்டவைகளுக்காக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நிகழாண்டில் தமிழ்நாட்டிற்கு 1,707 மாணவிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 இக்கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவிகள் 10ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று நடப்பாண்டில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 11ஆம் பயில்பவராக இருக்க வேண்டும்.
 சேர்த்தல் அனுமதிச் சீட்டு கடிதம் நகல் இணைத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு குறைவாக இருத்தல் வேண்டும். இதற்காக ரூ.20 மதிப்புள்ள நீதிமன்ற சாரா முத்திரைத்தாளில் உறுதி ஆவணம் அவசியம் விண்ணப்பத்துடன் இணைத்தல் வேண்டும்.
மாணவிகள் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து தாங்கள் பயிலும் கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக