புதன், 16 ஜூலை, 2014

எம்ஜிஆர் திட்டில் மாணவியின் சடலம் : அடையாளம் தெரிந்தது

பரங்கிப்பேட்டை:கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை  அருகே எம்ஜிஆர் திட்டில் இறந்து கிடந்த மாணவி நாகை மாவட்டம், சீர்காழி அருகே தென்னலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
 சிதம்பரம் அருகே கிள்ளையில் கடலோரப் பகுதியில் கடந்த 10ஆம் தேதி 16 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவியின் சடலம் கிடந்தது.
அதனருகில் பள்ளிச் சீருடை, பை, காலணிகள் இருந்துள்ளன. மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்திருக்கலாம் என கூறப்பட்டது.
 அண்ணாமலை நகர் போலீஸôர் வழக்குப் பதிந்து, இதுகுறித்து அனைத்து மாவட்ட போலீஸôருக்கும் தகவல் தெரிவித்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், வடக்கு மண்டல் ஐஜி மஞ்சுநாத், விழுப்புரம் சரக டிஐஜி எஸ்.முருகன், கடலூர் எஸ்பி ராதிகா, டிஎஸ்பி ஆர்.ராஜாராம் ஆகியோர் சிதம்பரத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
 மாணவியின் ஆடையில் சீர்காழி தையல் கடையின் முகவரி இருந்தது. இதையடுத்து நாகை மாவட்டம் மற்றும் கடலூர் மாவட்ட போலீஸôர் இணைந்து காணாமல் போன மாணவிகள் குறித்தும், நீண்ட நாள்களாக பள்ளிகளுக்கு வராத மாணவிகள் குறித்தும் விசாரணை நடத்தி வந்தனர்.
 இந்நிலையில், நாகை மாவட்டம் சீர்காழி தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லூயிஸ், தனிப்பிரிவு காவலர் தவப்பாண்டியன் ஆகியோர் ஊர், ஊராகச் சென்று காணாமல் போன மாணவிகளின் வீட்டுக்குச் சென்று, உயிரிழந்த மாணவியின் உடல் மற்றும் ஆடைகள் கொண்ட படத்தை காண்பித்து விசாரித்து வந்தனர்.
 அப்போது இறந்த மாணவியின் பெரியம்மாள் மகள் ஜெயபாரதி என்பவர் அந்த உடையைப் பார்த்து, இந்த உடை தன்னுடையதுதான் என்றும், அதை தனது சின்னம்மா மகள் கௌசல்யாவுக்கு (18) கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 இதையடுத்து, போலீஸôர் ஜெயபாரதியை சிதம்பரத்துக்கு அழைத்து வந்து மாணவியின் உடலில் உள்ள அடையாளம் மற்றும் ஆடைகளை வைத்து அம்மாணவி கௌசல்யா என்பதை உறுதி செய்தனர்.
 இறந்த மாணவி கௌசல்யா நாகை மாவட்டம், தென்னலக்குடியைச் சேர்ந்த தொழிலாளி திருக்கார்த்திகேயன்-பழனியம்மன் தம்பதியின் மகள் எனத் தெரியவந்தது. கௌசல்யா சீர்காழி அருகே காரைமேடு ஆதிதிராவிடர் நல அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் கடந்த ஜூலை 2ஆம் தேதி முதல் காணவில்லை என தெரியவந்துள்ளது. இதுகுறித்து சீர்காழி மற்றும் அண்ணாமலை நகர் போலீஸôர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்
மேலும் போலீஸார் விசாரணையில் சீர்காழி வட்டம் பழையாறைச் சேர்ந்த அன்புதாஸ் என்பவர் வாலிபர் மேற்கண்ட மாணவியை அழைத்துச் சென்றதாக தெரியவந்து அவரை பிடித்து சீர்காழி மற்றும் அண்ணாமலைநகர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன மாணவி அடையாளம் தெரிந்ததை அடுத்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்திற்கு வந்து மாணவியின் தந்தை மற்றும் பெரியம்மா மகள் ஜெயபாரதியிடம் விசாரணை நடத்தினார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக