வியாழன், 17 ஜூலை, 2014

திறப்பு விழா கண்ட மீன்பிடி துறைமுகம் : பயன்பாட்டிற்கு வராத அவலம்


பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில் 13 கோடி ரூபாய் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட மீன்பிடி துறைமுக இறங்கு தளத்தை முதல்வர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தும் இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். 
பரங்கிப்பேட்டை கடற்கரை கிராமங்களான சாமியார்பேட்டை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, பரங்கிப்பேட்டை, சின்னூர் உட்பட
20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் முகத்துவாரம் வழியாக படகில் கடலுக்கு சென்று பிடித்து வருகின்றனர். தினமும் 50 டன் அளவிற்கு கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கனரக வாகனங்கள் மூலம் அனுப்பப்படுகிறது. கடலில் இருந்து படகுகள் மூலம் கொண்டு வரப்படும் மீன் வகைகள் அன்னங்கோவில் மண் தரையில் வைத்து சுகாதாரமற்ற நிலையில் பேக்கிங் செய்யப்படுவதால், மீன்பிடி இறங்குதளம் கட்டித்தரக்கோரி கடந்த 20 ஆண்டுகளாக மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.


அதனைத் தொடர்ந்து, கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் அன்னங்கோவிலில் 13 கோடி ரூபாய் மதிப்பில், மீன்களை ஏலம் விட 3 கட்டடங்கள், வலைகளை காய வைக்க, பின்னுவதற்கு 2 கட்டடங்கள், மீன்களை விற்பனை செய்ய 3 கட்டடங்களில் 120 அறைகள், பெண்கள், ஆண்களுக்கு தனித்தனியாக கழிவறை, குடிநீர், வாகனங்கள் பார்க்கிங் வசதி, நிர்வாக அலுவலகம், மீன் பதப்படுத்தும் ஐஸ் பிளாண்ட் சாலை வசதி, மின் இணைப்பு உள்ளிட்ட அனைத்து கட்டட பணிகளும் முடிந்து கடந்த ஒரு ஆண்டாக திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த மாதம் முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்ஸ் மூலம் அன்னங்கோவில் மீன் இறங்குதளத்தை திறந்து வைத்தார். ஆனால் கடந்த ஒரு மாதமாக மீன் இறங்குதளத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் புதியதாக கட்டப்பட்ட கட்டடங்கள் பூட்டியே கிடக்கிறது. இதனால், மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மீன் வியாபாரி செழியன் கூறுகையில், "மீன்பிடி இறங்கு தளத்தில், இன்னும் மின்சார வசதி, குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. தற்போது இரவு நேரங்களில் சமூக விரோதிகள் குடித்துவிட்டு பாட்டில்களை நடந்துச் செல்லும் பாதைகளில் உடைத்துப் போடுகின்றனர். மீனவர்களின் நலன் கருதி விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர மீன் வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக