வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து வழங்க தமிழகத்தில் 43 ஆயிரம் மையங்கள்

சென்னை:நாடு முழுவதும் கடந்த ஜனவரி 19-ந்தேதி, முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்பாக நடைபெற்றது. அதேபோல் இரண்டாம் தவணை சொட்டு மருந்து முகாம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 43 ஆயிரத்து 51 மையங்களில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் 23-2-2014 அன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ் நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் / அரசு மருத்துவமனைகள் / அங்கன்வாடி மையங்கள் / சத்துணவு மையங்கள் / பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் 43,051 சொட்டு மருந்து மையங்கள் பிரத்தியேகமாக நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

சொட்டு மருந்து வழங்கும் மையம் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும். அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் இரண்டாம்  தவணையாக சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். புதிதாக பிறந்த  குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.

முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1652 நகரும் மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1000 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாரா பணியாளர்கள், ரோட்டரி இண்டர்நேஷனல் போன்ற சங்கங்களை சார்ந்த பணியாளர்கள் சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக