வியாழன், 9 ஜனவரி, 2014

தானே', பசுமை வீடு கட்டும் அரசு திட்ட வீடுகளில் முறைகேடு அம்பலம்

கடலூர்:தானே', இந்திரா, பசுமை திட்ட வீடுகளில் நடக்கும் முறைகேடுகளால், குடிசையில்லா மாவட்டமாக மாற்றுவதில் சிக்கல் எழுந்துள் ளது.
"தானே' புயல் பாதித்த கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், 200 சதுர அடியில், ஒரு லட்சம் "தானே' வீடுகள் கட்டித்தரப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, கடலூர் மாவட்டத்திற்கு 90 ஆயிரம் வீடுகள் கட்ட 900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இப்பணிகளுக்கு பயனாளிகளுக்கு உதவியாக மாதம் 12 ஆயிரம் ஊக்கத் தொகையில் 200 தொழில் நுட்ப உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

அதில் கடலூர் ஒன்றியத்தில் 11 ஆயிரத்து 108 வீடுகளும், அண்ணாகிராமம் 7,236, பண்ருட்டி 12 ஆயிரத்து 767, குறிஞ்சிப்பாடி 14 ஆயிரத்து 123, காட்டுமன்னார்கோவில் 7,631, குமராட்சி 9,342, கீரப்பாளையம் 9,620, மேல்புவனகிரி 6,136, பரங்கிப்பேட்டை 4,388, விருத்தாசலம் 2,244, கம்மாபுரம் 3,007, நல்லூர் 1,679, மங்களூர் ஒன்றியத்தில் 2,182 வீடுகளும் ஒதுக்கப்பட்டன.

வீடுகளின் குறைந்த பரப்பளவு, மணல் தட்டுப்பாடு, ஆள் கூலி உயர்வு, ஊராட்சித் தலைவர்களுக்கு கமிஷன் உட்பட பல காரணங்களால் கடலூர், காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி ஒன்றியங்களில் பலர் ஒரு லட்சத்தில் "தானே' வீடு கட்ட மறுத்தனர்.

அதைத்தொடர்ந்து இலக்கை எட்டுவதற்காக அதிகாரிகள், விருத்தாசலம் ஒன்றியத்திற்கு 1,500 வீடுகள், நல்லூர் 9,424, கம்மாபுரம் 1,000, மங்களூர் ஒன்றியத்திற்கு 1,570 வீடுகள் கூடுதலாக ஒதுக்கினர்.

இதற்காக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் விதிகளை தளர்த்தி பி.டி.ஓ.,க்கள், ஊராட்சி செயலர்களை முடுக்கி விட்டனர்.

ஆனால், கடந்த ஒன்னரை ஆண்டுகளில் மாவட்டத்தில் 20 ஆயிரம் வீடுகளே கட்டப்பட்டன. 12 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வீடுகள் அடிப்படை பணிகளே துவங்காமல் உள்ளன. 59 ஆயிரம் வீடுகள் அரைகுறை பணியால் தள்ளாடுகின்றன.

இந்நிலையில், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, அண்ணாகிராமம், கீரப்பாளையம் ஒன்றியங்களில் கடந்த தி.மு.க., ஆட்சியில் கட்டிய கலைஞர் வீட்டுக்கு வெள்ளை அடித்து "தானே' வீடாக மாற்றி முறைகேடாக பணம் பெற்றது அதிகாரிகளின் ஆய்வில் கண்டறியப்பட்டது. அவர்களிடமிருந்து 40 லட்சம் ரூபாயும், கம்மாபுரம் ஒன்றியத்தில் 7 லட்சம் ரூபாயும் திரும்ப பெறப்பட்டது. உடந்தையான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதே போல், 2,713 பசுமை வீடுகள், 3,750 இந்திரா நினைவுக் குடியிருப்புகள் என ஒரே ஆண்டில் கடலூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டன.

அதில், மங்களூர் ஒன்றியத்தில் பசுமை வீடு பணியில் முறைகேடு செய்த இரண்டு பி.டி.ஓ.,க்கள், பொறியாளர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கலெக்டர் உத்தரவுபடி கம்மாபுரம், பண்ருட்டி, விருத்தாசலம், மங்களூர் ஒன்றியங்களில் "தானே' வீடுகள் ஆய்வு செய்யப்படுகின்றன

0 கருத்துகள்:

கருத்துரையிடுக