கடலூர் சிங்காரத்தோப்பைச் சேர்ந்த மீனவர் மதியழகனும் அவரது தம்பியும் மரக்காணம் அருகே ஆலம்பாறை என்ற இடத்தில் இருந்து கடலுக்குள் 5 கிலோ மீட்டர் தொலைவில் பெரிய விசைப்படகில் தங்கியிருந்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது காலை சுமார் 8–30 மணி இருக்கும். திடீரென மேகங்கள் வானில் இருந்து தாழ்வாக கடல் அருகே இறங்கியதையும், அப்போது கடல் நீர் சுழல் போல் மேலெழுந்து மேகங்களுக்குள் இழுக்கப்படும் அதிசய நிகழ்வையும் கண்டனர். சுழலின் மூலம் கடல் நீர் மேகத்துக்கு எடுத்துச்செல்லப்பட்ட நிகழ்வு சுமார் அரை மணிநேரம் நீடித்தது.
இந்த அதிசய நிகழ்வை பார்த்து மெய்சிலிர்த்துப்போன மீனவர் மதியழகன், தனது செல்போன் காமிரா மூலம் அதிசய காட்சியை ‘கிளிக்’ செய்தார். இன்று கரைக்கு திரும்பி வந்த அவர் அந்த படங்களை ‘தினத்தந்தி’ நிருபரிடம் கொடுத்தார். இது பற்றி மதியழகன் கூறியதாவது:–
பொதுவாக மழைகாலங்களில் மேகம் கீழிறங்கி கடல் நீரை உறிஞ்சும் காட்சியை பல முறை கண்டிருக்கிறேன். அப்போதெல்லாம் 1 கிலோ மீட்டருக்கு அப்பால் தான் பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது மிக அருகில் இக்காட்சியை கண்டோம். எங்கள் படகில் இருந்து 5 நிமிடத்தில் அந்த இடத்துக்கு சென்று விடலாம். அவ்வளவு அருகே இதுவரை நான் இக்காட்சியை கண்டதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோன்று நிகழ்வை, யானை தும்பிக்கையை இறக்கி இருக்கிறது. என்று மீனவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அறிவியலாளர்கள் இதை நீர்த்தாரை என்று சொல்கிறார்கள். இது பற்றி கடலூர் துறைமுக அதிகாரி கேப்டன் அன்பரசன் கூறியதாவது:–
கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், கடலின் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால், கடலில் நீர்த்தாரைகள் எனப்படும் அதிசய நிகழ்வு ஏற்படும்.
பொதுவாக பருவநிலை மாற்றம் ஏற்படும் போது இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும். மீண்டும் இரண்டு காற்றுகளின் வெப்பநிலையும் சமமாக மாறும் போது, நீர்த்தாரைகள் மறைந்து விடும். இந்த விநோத நிகழ்வின் போது கடலின் நீர் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறி விடும். இதன் வேகம் பல கிலோ மீட்டராக இருக்கும்.
இதற்கு ஆங்கிலத்தில் ‘‘டோர்னடோ’’ என்று பெயர். இவைகள் ஐரோப்பா போன்ற பகுதிகளில் அதிகம் காணப்படும். இவை அனைத்தும் பருவகாலம் மாறும் போது நடைபெறும் நிகழ்வுகள்.என்று அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக