செவ்வாய், 31 டிசம்பர், 2013

பரங்கிப்பேட்டை அருகே தண்ணீரின்றி வயல்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் வாய்க்காலில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே வயல்களில் தண்ணீரின்றி வெடிப்பு ஏற்பட்டு வருவதால் விவசாயிகள் கவலையடைந்து வருகிறன்றனர். அரியகோஷ்டி வாய்க்காலில் போதுமான அளவிற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட அரியகோஷ்டி, அகரம், ஆணையாங்குப்பம், சில்லாங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் பெரும்பாலாவனர்கள் நேரடி நெல் விதைப்பும், ஒரு சிலர் வயலில் நாற்றங்கால் அமைத்து நடவு பயிர் செய்தனர்.
பாசன வாய்க்காலில் தண்ணீர் தொடர்ந்து வந்ததாலும் இப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நெற்பயிர்களை காப்பாற்றி பயிர்களில் இருந்த களைகளை பிடுங்கி உரம், பூச்சிமருந்து தெளித்து நெற்பயிர்களை நன்கு வளர்த்து வந்ததால், நெற்பயிர்கள் செழுமையாக உள்ளது.
கடந்த பத்து நாட்களாக அரியகோஷ்டி வாய்க்காலில் தொடர்ந்து தண்ணீர் வராததால் அரியகோஷ்டி உள்ளிட்ட நான்கும் மேற்பட்ட கிராமங்களில் வயல்களில் தண்ணீரின்றி வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்தும் பயனில்லை.
கடந்த 26ம் தேதி பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கண்டித்து விவசாய சங்கம், மா.கம்யூ., கட்சியினர் பு.முட்லூர் எம்.ஜி.ஆர்., சிலை அருகே சாலை மறியலில் செய்ய முயன்றனர்.
தகவலறிந்த தாசில்தார் விஜயா, டி.எஸ்.பி., ராஜாராம் ஆகியோர் பொதுப்பணித்துறை அதிகாரிகளை நேரில் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
அரியகோஷ்டி வாய்க்காலில் தொடர்ந்து ஒரு வாரம் முழு அளவு தண்ணீர் திறந்துவிடுவது என்றும், ஒரு வாரத்திற்கு பிறகு மூன்று நாட்கள் சேத்தியாத்தோப்பு பகுதிக்கும், அடுத்த மூன்று நாள் அரியகோஷ்டி கடை பகுதிக்கும் தண்ணீர் விடுவது என முடிவு செய்யப்பட்டது.
இதனால் தற்போது வாய்க்காலில் போதுமான அளவிற்கு தண்ணீர் வராததால் பழைய நிலைமைபோல் நெற்பயிர்கள் தண்ணீரின்றி வெடிப்பு ஏற்பட்டு காய்ந்து வருகிறது.
வசதி படைத்தவர்கள் குளத்தில் உள்ள தண்ணீரை இன்ஜின் மூலம் இறைத்து வருகின்றனர். இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கண்டித்து போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
நெற்பயிர்களைக் காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக