கடலூர்:வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது. கடலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக கலெக்டர் அறிவித்துள்ளார் இது தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நேற்று முதல் மழை பெய்து வருவதால், இன்று(வெள்ளிக்கிழமை) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது, ஆனால் 10 மற்றும் 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்..
வடகிழக்கு பருவ மழை கடலூர் மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பெய்ய வில்லை. இருப்பினும் சமீபத்தில் உருவான 2 புயல் சின்னத்தால் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் தற்போது உருவன மாதி புயல் வலுவிழந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியது. இதன்காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி நேற்று அதிகாலை முதல் கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. லேசான சாரலுடன் ஆரம்பித்த மழை சற்று நேரத்தில் கன மழையாக பெய்ய ஆரம்பித்தது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ– மாணவிகள் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்த படியும் சென்று வந்தனர். இதனால் வேலைக்கு செல்லும் அரசு அலுவலர்கள் முதல் கூலி தொழிலாளர்கள் வரை அனைவரும் சிரமத்துடன் சென்றனர். இந்த மழையினால் சாலையோர கடைவியாபாரிகள் வியாபாரம் முடங்கியது.
இதனால் லாரன்ஸ் ரோடு, கடலூர்– சிதம்பரம் சாலை, புதுப்பாளையம், சில்வர்கடற்கரை சாலை போன்ற முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இந்த மழை மதியம் 1 மணி வரை நீடித்தது. மதியம் 1 மணிக்கு பிறகு மழை இல்லை. அதன்பிறகு மாலை 4 மணிக்கு பிறகு லேசான சாரலுடன் மழை தொடர்ந்து பெய்ய ஆரம்பித்தது.
பண்ருட்டியில் காலை 5 மணி முதல் மிதமான மழை பெய்ய தொடங்கியது. அந்த மழையானது நிற்காமல் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேலும் நீடித்தது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள், தரை கடைவியாபாரிகள், பொது மக்கள் பாதிப்படைந்தனர். குறிப்பாக காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ– மாணவிகள் மழையால் பெரும் அவதி அடைந்தனர்.
விருத்தாசலம் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை ஏதும் இன்றி வறண்ட வானிலையே நிலவி வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.
காலை முதலே சாரல் மழையாக பெய்து கொண்டிருந்தது. இதனால் அலுவலகங்கள், கல்லூரி, பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பெரும் அவதி அடைந்தனர். தொடர்ந்து மழையுடன் குளிர்ந்த காற்றும் அவ்வபோது வீசி வந்தது. இடைவிடாது தூரல் போட்டுக்கொண்டிருந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு பிறகு பலமான காற்று வீசியது.
விருத்தசாலத்தை சுற்றியுள்ள பெண்ணாடம், மங்கலம்பேட்டை, நெய்வேலி போன்ற பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.
சிதம்பரம் பகுதிகளில் நேற்று காலை 6 மணி முதல் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. காலை 10 மணிக்கு பிறகு காற்றுடன் தொடங்கிய மழை மதியம் 1 மணி வரை நீடித்தது. இதனால், தாழ்வான பகுதிகளான படித்துறை இறக்கம், கீழசன்னதி, வடக்குவீதி, தங்கரத தெரு, காந்திசிலை, பஸ் நிலையம், எஸ்.பி. கோவில் தெரு பகுதி சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையையும் பொருட்படுத்தாமல் மாணவ– மாணவிகள் குடை பிடித்தபடி நடந்து சென்றனர்.
மேலும், இருசக்கர வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகள் மழை கோட்டு அணிந்து சென்றதை காண முடிந்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வேளக்குடி, பழைய நல்லூர் ஆகிய பகுதியில் விவசாயிகள் பயிரிட்டு இருந்த பன்னீர்கரும்புகள் சாய்ந்தன. இதேபோல் காட்டுமன்னார்கோவில், குமராட்சி, புவனகிரி, சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் சாரல்மழை தொடர்ந்து பெய்து வருகிறது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக