வியாழன், 12 டிசம்பர், 2013

தொடரை வென்ற தென் ஆப்பிரிக்க:கடைசி போட்டியில் மழையால் அவமானத்திலிருந்து தப்பிய இந்தியா

செஞ்சுரியன் :இந்திய, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை வென்றது  தென் ஆப்பிரிக்க  3-வது ஒருநாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.
முன்னதாக, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்க வீரர் குயின்டன் டி காக் மற்றும் கேப்டன் டி வில்லியர்ஸ் சதம் அடுத்துக் கைகொடுத்தனர். இதனால் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 301 ரன்கள் எடுத்தது.
ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி தொடரை வென்றிருந்தது. எனவே, 3-வது ஆட்டம் கைவிடப்பட்டதால் யாருக்கும் பாதகம் ஏற்படவில்லை. இந்த தொடரின் 3 ஆட்டத்திலும் இளம் வீரர் டி காக் (20) சதம் அடித்து கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஸ்டெயின், காலிஸ் இல்லை: இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் செஞ்சுரியனில் புதன்கிழமை நடைபெற்றது. முதல் இரண்டு ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றிருந்ததால், மூத்த வீரர் காலிஸ், வேகப்புயல் ஸ்டெயின் மற்றும் மோர்கல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர்களுக்குப் பதிலாக ஹென்றி டேவிட்ஸ், பர்னல் மற்றும் இம்ரான் தஹிர் ஆகியோர் வாய்ப்பு பெற்றனர். இந்திய அணியில் ரஹானே நீக்கப்பட்டு யுவராஜ் மீண்டும் சேர்க்கப்பட்டார்.
தொடக்கம் தடுமாற்றம்: முந்தைய நாள் மழை பெய்திருந்த போதிலும் திட்டமிட்டபடி ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் 2 ஆட்டத்தில் அபார தொடக்கம் தந்த தென் ஆப்பிரிக்க தொடக்க ஜோடி இம்முறை கைகொடுக்கவில்லை. 3 பெüண்டரி அடித்திருந்த ஆம்லா 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முகமது ஷமி பந்தில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். இஷாந்த் சர்மா வீசிய 8-வது ஓவரில், இரண்டாவது ஸ்லிப்பில் இருந்த ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து டேவிட்ஸ் (1) நடையைக் கட்டினார். அதே ஓவரில் டுமினி(0) ஆட்டமிழந்தார். இவரையும் 2-வது ஸ்லிப்பில் இருந்த ரெய்னா அற்புதமாக டைவ் அடித்து கேட்ச் செய்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 28 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
சரிவிலிருந்து மீட்சி: பின்னர் கேப்டன் டி வில்லியர்ஸ், டி காக் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. இருவரும் இந்திய பந்து வீச்சை நிதானமாக எதிர் கொண்டனர். அதேநேரத்தில் அணியின் ரன் ரேட்டையும் கணிசமாக உயர்த்தினர். அனுபவ வீரர் போல ஆடிய டி காக் அரைசதம் அடித்தார். மறுமுனையில் டி வில்லியர்ஸýம் அரைசதம் அடித்தார். அதன்பின் இருவரும் அதிரடிக்கு மாறினர். கோலி ஓவரில் டி காக் சிக்ஸர்கள் பறக்க விட்டார் என்றால், முகமது ஷமி ஓவரில் டி வில்லியர்ஸ் இரண்டு பந்துகளை சிக்ஸருக்கு அனுப்பி வைத்தார். இதற்கிடையே டி காக் சதம் அடித்தார்.
டேவிட் மில்லர் அதிரடி: இருப்பினும் சதம் அடித்த வேகத்தில் டி காக் (101) பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்துக்கு மாறிய டி வில்லியர்ஸýம் சதம் அடித்தார். இது ஒருநாள் பேட்டிகளில் அவர் அடிக்கும் 16-வது சதம். 101 பந்துகளை சந்தித்த டி வில்லியர்ஸ் 5 சிக்ஸர் 6 பெüண்டரிகளுடன் 109 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மெக்லரனை (6), இஷாந்த் சர்மா அனுப்பி வைத்தார்.
மறுமுனையில் டேவிட் மில்லர் பெüண்டரிக்கும், சிக்ஸருக்கும் பந்தைப் பறக்க விட்டு அரைசதம் அடித்தார். இதற்கிடையை பர்னல் (9), பிலாந்தர் (0) சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.
50 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்புக்கு 301 ரன்கள் எடுத்திருந்தது. மில்லர் 56 ரன்களுடனும் (34 பந்து, 3 சிக்ஸர், 5 பெüண்டரி) சாட்சோபே 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய தரப்பில் இஷாந்த் சர்மா 4, முகமது ஷமி 3 விக்கெட் வீழ்த்தினர். அபாரமாக பந்து வீசிய இஷாந்த் சர்மா ஒருநாள் ஆட்டங்களில் 100 விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இணைந்தார்.
மழை குறுக்கீடு: இந்திய அணி பேட்டிங் செய்வதற்கு முன்னதாக மழை குறுக்கிட்டது. ஆட்டத்தைத் தொடர இயலாதபடி தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என தொடரை வென்றது.
இதைத்தொடர்ந்து, இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. முதல் டெஸ்ட் ஜோஹன்னல்பர்க் மைதானத்தில் டிசம்பர் 18-ம் தேதி தொடங்க உள்ளது. ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி டெஸ்ட் தொடரில் எழுச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து 3 சதம் அடித்து சாதனை
தென் ஆப்பிரிக்காவின் டி காக் முதல் 2 ஆட்டங்களில் (135,106) சதம் அடித்திருந்தார். இந்நிலையில் 3-வது ஒருநாள் ஆட்டத்திலும் அவர் அபாரமாக ஆடி சதம் அடித்தார். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து 3 ஆட்டங்களில் சதம் அடித்த 2-வது வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் பாகிஸ்தானின் ஜாகிர் அப்பாஸ், இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து 3 சதங்கள் அடித்திருந்தார்.
தவிர, தொடர்ந்து 3 சதங்கள் அடித்த 3-வது தென் ஆப்பிரிக்க வீரர் டி காக் என்பதும், ஒட்டுமொத்த வரிசையில் 5-வது வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 300 ரன்களுக்கும் மேல் குவித்த 3-வது வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இதற்குமுன் நியூஸிலாந்தின் மார்டின் கப்டில், ஜிம்பாப்வேயின் பிரெண்டன் டெய்லர் 300-க்கும் மேல் ரன்கள் குவித்துள்ளனர்.
மழையினால் 3- 0 என்ற முற்றொழிப்புத் தோல்வியிலிருந்து இந்தியா அதிர்ஷ்டவசமாக தப்பித்துள்ளது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக