புதன், 11 டிசம்பர், 2013

பரங்கிப்பேட்டை அருகே சாயப்பட்டறை அமைப்பதற்கு 20 கிராம மக்கள் தொடர் போராட்டம்...அறிவிப்பு!

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே உள்ள சைமா டெக்ஸ்டைல் பார்க் நிறுவனம் அமைவதற்கு 18 கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை சுற்றி உள்ள கடலோர கிராமங்கள்  அருகில் அமைய உள்ள சைமா டெக்ஸ்டைல் பார்க் நிறுவனம் தனது துவக்க பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்நிறுவனம்
துணிகளுக்கு போடும் சாயக்கழிவுகளை சுத்திகரிப்பு செய்து கடலில் கொண்டு விட உள்ளது. திருப்பூரில் இத்தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் இப்போது பரங்கிப்பேட்டை பகுதிக்கு வந்துள்ளனர். சைமா தொழிற்காலையில் இப்பகுதியில் உள்ள மீனவர்கள், விவசாயிகள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்ற அச்சம் மக்களிடையே உருவாகியுள்ளது.
குறிப்பாக நிலத்தடி நீர் கடுமையாக உறுஞ்சப்படும், சாயக் கழிவுகளால் மீன் வளம் அடியோடு பாதிக்கப்படும். ரசாயன கழிவுகளால் சுற்றுச்சூழல், விவசாயம் முழுமையாக பாதிக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே இந்நிறுவனம் அமைவதை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டக்குழு அமைத்து தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.

பரங்கிப்பேட்டை  அருகே பெரியப்பட்டில் உள்ள ஒரு தனியார்  மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்
 பெரியப்பட்டு, பெரியாண்டிக்குழி, வாண்டியாப்பள்ளம், சாமியார்பேட்டை, பெரியக்குப்பம் உள்ளிட்ட 20 கிராமங்களைச் சேர்ந்த ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். கூட்டத்தில்  கடற்கரையோர வாழ்வுரிமை இயக்க மாவட்ட ஒருங்கினைப்பாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு கோரிக்கைகள் மற்றும் தொடர் போராட்டங்களை முன் வைத்துப் பேசினார்.
கூட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும், இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் சார்பில் தமிழக முதல்வருக்கு டிசம்பர் இறுதி வாரத்தில் 10,000 (பத்தாயிரம்) அஞ்சல் அட்டைகள் அனுப்புவது, வரும் பொங்கல் பண்டிகையை இப்பகுதியை சார்ந்த 18 கிராம மக்களும் ”கருப்பு பொங்கலாக” அறிவித்து பொங்கள் பண்டிகையின் போது சுவரொட்டிகள் ஒட்டுவது, இப்பகுதி பாதிப்புகளை துண்டு பிரசுரமாக வெளியிட்டு சுற்றி உள்ள 40க்கும் மேற்பட்ட கிராம மக்களின் ஆதரவை திரட்ட பிரச்சார இயக்கம் நடத்துவது, ஜனவரி மாதத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 10 நாள் தொடர் உண்ணாவிரதம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக