
1992 டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி பாபரி மஸ்ஜிதின் கும்பாக்களுடன் நாட்டின் கண்ணியம் வீழ்ந்தது. அன்று ஒரு கறுப்பு ஞாயிறாக வரலாற்றில் பதிவானது. தேசத் தந்தை காந்தியின் படுகொலைக்குப் பிறகு இந்தியா கண்ட மிகப் பெரிய தீவிரவாத செயலுக்கு உலகம் சாட்சியானது.
உச்சநீதிமன்றத்திற்குக் கூட சவால் விடுத்து நடத்தப்பட்ட பயங்கரவாத செயலுக்குக் காரணமானவர்கள் இன்றும் சுதந்திரமாக சுகம் அனுபவிக்கின்றார்கள்.
எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பால் தாக்கரே, அசோக் சிங்கால், உமா பாரதி, கிரிராஜ் கிஷோர், ஸாத்வி ரிதாம்பரா உள்ளிட்டோர் பாபரி மஸ்ஜிதை இடிக்க சதித் திட்டம் தீட்டினார்கள் என்று லிபர்ஹான் கமிஷன் கண்டுபிடித்த பிறகும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஒரு சிறு விரலைக் கூட அசைக்க நமது சட்டங்களால் இயலவில்லை.
மஸ்ஜிதைத் தகர்ப்பதில் நேரடியாக பங்கேற்ற சங்க் பரிவார தலைவர்களுடன், கரசேவகர்கள் என்ற காவி பயங்கரவாதிகள் புனித இறையில்லமான பாபரி மஸ்ஜிதை இடிக்கும்போது வெறும் 11 கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்ட இராணுவத்தை அங்கு செல்ல அனுமதிக்காமல் பாபரி மஸ்ஜித் முழுவதும் இடிக்கப்படும் வரை பூஜை அறையில் கதவைச் சாத்திவிட்டு உள்ளே இருந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், 1989-ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் நிலத்தில் ராமனுக்கு கோயில் கட்ட அடிக்கல் நாட்ட அனுமதி அளித்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட மதச்சார்பற்ற (?) தலைவர்களும் இந்த பயங்கரவாத குற்றத்தில் சம பங்காளிகளே.
நரசிம்மராவால் நியமிக்கப்பட்ட லிபர்ஹான் கமிஷன் 16 ஆண்டுகளுக்குப் பிறகு பல கோடி ரூபாய்களை செலவழித்து அளித்த அறிக்கையில் சங்க் பரிவார தலைவர்கள் சதித் திட்டம் தீட்டி பாபரி மஸ்ஜிதை இடித்துத் தள்ளியதாக தெளிவாக தெரிவித்திருந்தார். ஆனால், பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. முதலில் அத்வானி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சதித் திட்டம் தீட்டிய குற்றம் சுமத்தாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
பின்னர் சதித் திட்டம் குற்றம் சுமத்தியபோது அலகாபாத் உயர்நீதிமன்றம் சி.பி.ஐ.யின் நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதற்கு எதிராக சி.பி.ஐ. சமர்ப்பித்த மேல்முறையீடு தற்போது உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது.
பாபரி மஸ்ஜித் நிலத்தின் உரிமை குறித்த வழக்கும் தற்போது உச்சநீதிமன்றத்தில் உள்ளது. பாபரி மஸ்ஜித் நிலை பெற்றிருந்த 2.77 ஏக்கர் நிலத்தை ஹிந்து, முஸ்லிம், நிர்மோஹி அகாரா ஆகிய 3 தரப்பினருக்கும் பாகப் பிரிவினை செய்து 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றம் ஓர் அதிசய தீர்ப்பை அளித்தது.
எவ்வித ஆதாரமும், ஆவணங்களும் இன்றி கற்பனையான புராணக் கதைகளை ஆதாரமாகக் கொண்டு இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பை 2011-ஆம் ஆண்டு மே மாதம் 9-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்தது.
1993-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அரசு கையகப்படுத்திய 67.03 ஏக்கர் நிலமும், 1994-ஆம் ஆண்டிலும், 2002-மார்ச் மாதத்திலும் உச்சநீதிமன்றம் வெளியிட்ட “ஸ்டேட்டஸ் கோ” என்ற பழைய நிலையை நீடிக்கச் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பாபரி மஸ்ஜித் நிலை பெற்றிருந்த நிலத்தில் தற்போதும் பூஜைகள் தங்கு தடையின்றி நடந்து வருகின்றன.
நூற்றாண்டுகளாக முஸ்லிம்கள் ஓரிறைவனை வணங்கி வந்த மஸ்ஜிதில் அவர்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு, ஹிந்துக்களுக்கு பூஜை செய்ய அனுமதி வழங்கிய ஃபைசாபாத் நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பின் சாதகம் இன்றும் தொடருகிறது.
14 கம்பெனி ஆயுத போலீஸ் பாதுகாப்பு வழங்கி கோடிக்கணக்கான ரூபாயை ஆண்டு தோறும் செலவிட்டு தற்காலிக சட்டவிரோத கோயிலை அரசு பராமரித்து வருகிறது. பாபரி மஸ்ஜிதை மறக்கடிக்கச் செய்ய அதனை இடித்தவர்களால் இன்று வரை இயலவில்லை. பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் ஒரு நாள் நீதி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் முஸ்லிம்கள் உள்ளனர்.
source:thoothu online
0 கருத்துகள்:
கருத்துரையிடுக