வெள்ளி, 13 செப்டம்பர், 2013

பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு செல்லத் தடை!: அரசு உத்தரவு

சென்னை :பள்ளிகளுக்கு மாணவ- மாணவிகள் செல்போன் கொண்டு செல்ல தமிழக கல்வித்துறை அதிரடியாக தடை விதித்துள்ளது.தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தற்போது மாணவ- மாணவிகள் அதிக அளவு செல்போன்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு செல்லக் கூடாது என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை விடுத்திருந்தும் செல்போன்களை மாணவர்கள் கொண்டுதான் செல்கிறார்கள். செல்போன்கள் மூலம் மாணவர்கள் ஆபாச படங்கள் பார்ப்பதாகவும் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகிவருகின்றன. இதனால், அவர்களின் கவனம் வேறுவிதமாக சென்று வாழ்க்கையை வீணாகும் அளவுக்கு போய்விடுகிறது.வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போதே மாணவர்கள், எஸ்.எம்.எஸ் அனுப்புகின்றனர். இதனால் பாடத்தில் கவனம் சிதறுவதோடு, தேர்வில் தோல்வி அடைகிறார்கள். இளம் வயது காதல் உருவாவதும் செல்போன்களால்தான். எனவே இதனை தடை செய்ய பள்ளிக் கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், " பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது என்று ஏற்கனவே தடை விதித்து பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில் இருந்து முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக பள்ளிகள் அனைத்துக்கும் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.இருப்பினும் மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு செல்போன் கொண்டு வருவதாக புகார் வந்தால் மீண்டும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் எந்த ஒரு மாணவ, மாணவியும் செல்போன் கொண்டு வரக்கூடாது.அவ்வாறு மீறி கொண்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டால் செல்போனை ஆசிரியர் வாங்கி வைத்துக் கொண்டு எச்சரித்து வகுப்பு முடிந்ததும் வீட்டுக்கு செல்லும்போது வழங்குவார். இந்த சுற்றறிக்கையை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக