வியாழன், 11 ஜூலை, 2013

மீன்பிடி தடைக்கால நிவாரணம் கிடைக்காமல் பரங்கிப்பேட்டை மீனவர்கள் பாதிப்பு

பரங்கிப்பேட்டை : மீன் பிடி தடைக்கால நிவாரணம் கிடைக்காமல் கடந்த மூன்று மாதங்களாக ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடலில் மீன் இனபெருக்கம் அடைவதற்காக ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் மே மாதம் 29ம் தேதி வரை மீன் பிடி தடைக்காலம் என்பதால் கடற்கரையோர மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்குச் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த காலங்களில் மீனவர்களுக்கு வருமானம் இருக்காது என்பதால் அவர்களுக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் மீன் பிடி தடைக்காலம் நிவாரணமாக அரசு சார்பில் ஒவ்வொரு மீனவர்களுக்கும் தலா 2,000 ரூபாய் வழங்கி வருகிறது.
இந்தாண்டு மீன் பிடி தடைக்காலம் முடிந்து மூன்று மாதங்களாகியும் இன்னும் மீன் பிடி தடைக்கால நிவாரணம் மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் பரங்கிப்பேட்டை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, சாமியார்பேட்டை, சின்னூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது கடலில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்களால் மீனவர்களுக்கு அதிகளவில் மீன் கிடைக்காததாலும், அரசு அறிவித்த மீன் பிடி தடைக்கால நிவாரணம் கிடைக்காததாலும் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலம் நிவாரணம் கிடைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக