வியாழன், 13 ஜூன், 2013

மீன்பிடி இறங்குதளம் திறப்பு விழா எப்போது :அன்னங்கோவில் பகுதி மீனவர்கள் எதிர்பார்ப்பு



பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில் மீனவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் 13 கோடி ரூபாய் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட மீன்பிடி இறங்கு தள திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.பரங்கிப்பேட்டை கடற்கரை கிராமங்களான சாமியார்பேட்டை, புதுக்குப்பம், , புதுப்பேட்டை, பரங்கிப்பேட்டை, சின்னூர் உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் முகத்துவாரம் வழியாக கடலுக்குச் சென்று வருகின்றனர்.அன்னங்கோவில் துறைமுகத்திலிருந்து அகிலா, சூரை, வஞ்சரம், மத்தி உள்ளிட்ட பல வகையான மீன்கள் தினமும் சுமார் 50 டன் அளவிற்கு கேரளா, கர்நாடகா, கோவா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கனரக வாகனங்கள் மூலம் எடுத்து செல்லப்படுகிறது.கடலில் இருந்து படகுகள் மூலம் கொண்டுவரப்படும் மீன் வகைகள் அன்னங்கோவில் மண் தரையில் சுகாதாரமற்ற நிலையில் பேக்கிங் செய்யப்பட்டு வந்தது.மேலும் படகில் இருக்கும் மீன் வகைகள் ஏலம் விடப்பட்டு கூலி ஆட்கள் மூலம் நீண்ட தூரம் எடுத்து சென்று பேக்கிங் செய்யப்படுவதால் மீனவர்களுக்கு அதிக செலவு ஏற்பட்டது.

இதனால் பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில் மீன்பிடி இறங்குதளம் கட்டித்தரக்கோரி கடந்த 20 ஆண்டுகளாக மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன்பேரில் அன்னங்கோவிலில் கடற்கரையோரம் 13 கோடி ரூபாய் மதிப்பில் மீன்பிடி இறங்கு தளம் அமைப்பதற்காக 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கியது.கடலில் இருந்து பிடித்து வரும் மீன்களை ஏலம் விட 3 கட்டடங்கள், மீனவர்களின் வலைகளைக் காய வைக்க, பின்னுவதற்கு 2 கட்டடங்கள், மீன் விற்பனை செய்ய 3 கட்டடங்களில் 120 அறைகள், பெண்கள், ஆண்களுக்கு தனித்தனியாக கழிவறை, குடிநீர், வாகனங்கள் பார்க்கிங் வசதி, நிர்வாக அலுவலகம், மீன் பதப்படுத்தும் ஐஸ் பிளாண்ட் உள்ளிட்ட அனைத்து கட்டட பணிகளும் முடிந்து தற்போது திறப்பு விழாவிற்காக தயாராக உள்ளது.புதிதாக கட்டப்பட்ட மீன் பிடி இறங்கு தளம் மூலம் பரங்கிப்பேட்டையைச் சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதுடன் அவர்களின் வாழ்வாதாரமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக