திங்கள், 27 அக்டோபர், 2014

வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்: தேர்தல் ஆணையப் பார்வையாளர் ஆய்வு

கடலூர்:கடலூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர் சேர்க்கை மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பதிவு பணிகளை ஞாயிற்றுக்கிழமை தேர்தல் ஆணையம் நியமித்த வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஏ.முகமது அஸ்லாம் ஆய்வு செய்தார்.
 மாவட்டத்துக்கு உள்பட்ட கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, புவனகிரி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி
 (தனி), காட்டுமன்னார்கோவில் (தனி) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரும் 2015, ஜனவரி 1ஆம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு புதிய வாக்காளர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கு வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 கடலூர் தொகுதியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கேஎன்சி மகளிர் கல்லூரி, பண்ருட்டி தொகுதியில் ஆர்.ஆர்.மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் திருத்தப் பதிவு குறித்த பணிகளை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் முகமது அஸ்லம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார், கோட்டாட்சியர் மோ.ஷர்மிளா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 சிதம்பரம்
 சிதம்பரம் நகரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கு முறை திருத்தம் மேற்கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக 43 வாக்குச்சாவடி மையங்களில் புதிய வாக்காளர் சேர்ப்பு குறித்த சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 மேற்கண்ட மையங்களை உதவிஆட்சியர் எம்.அரவிந்த் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் கிராம நிர்வாக அலுவலர் வி.செந்தில்நாதன் உடன் சென்றார்.
 விருத்தாசலம்
 விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.
 முகாமை கோட்டாட்சியர் ப.மு.செந்தில்குமார் தொடங்கிவைத்தார். நகராட்சி ஆணையர் செந்தில்முருகன், வட்டாட்சியர் சு.சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் தேர்தல் துறை பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக