வியாழன், 23 அக்டோபர், 2014

டெல்டா கடைமடை பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கர் நாற்றங்கால்கள் வெள்ளத்தில் மூழ்கியது

கடலூர், : கடலூர் மாவட்டத்தில் உள்ள டெல்டா கடைமடை பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நாற்றாங்கால்கள் மழை தண்ணீரில் மூழ்கியுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதிலும் உள்ள ஏரி, குளம், குட்டைகள், வாய்க்கால்கள் நிரம்பி வருகின்றன. தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பிரதான ஏரிகளான வீராணம், பெருமாள், வாலாஜா, வெலிங்டன் ஆகியவற்றிற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏறக்குறைய ஒரு லட்சம் ஏக்கரில் நேரடி நெல்விதைத்துள்ள விவசாயிகளுக்கு இந்த மழை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஆனால் டெல்டா கடைமடை பகுதிகளிலும், தாழ்வான பகுதிகளிலும் 20 ஆயிரம் ஏக்கரில் நெல் விதைத்து அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால்கள் மழை தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதை கருத்தில் கொண்டு கடைமடை பாசன பகுதி மற்றும் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வடிகால் வாய்க்கால்களை தூர் வாரி தண்ணீர் விரைவாக வடிந்து செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில் கடலூர் மாவட்டத்தின் கடைகோடி பகுதியான மங்களூரில் போதிய மழை பெய்யாததால் கவலை அடைந்துள்ள பருத்தி மற்றும் மக்காசோளம் விவசாயிகள் மழையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். தொடர்ந்து 4 வது நாளாக கடல் சீற்றமாக காணப்படுவதால்  மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக