புதன், 23 ஜூலை, 2014

சிதம்பரத்தில் பயங்கரம் சப்–இன்ஸ்பெக்டர் படுகொலை கழுத்து அறுபட்டு பிணமாக கிடந்தார்

சிதம்பரம் :சிதம்பரத்தில் சப்–இன்ஸ்பெக்டர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் வீட்டில் பிணமாக கிடந்தார்.
சப்–இன்ஸ்பெக்டர்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சேந்தநாடு கிராமத்தை சேர்ந்த பாவாடை மகன் கணேசன் (வயது 30). இவர் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ்நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். அங்கு சக்கரா அவன்யூ குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி பணிக்கு சென்று வந்தார்.
இந்தநிலையில் இவருக்கு விழுப்புரத்தை சேர்ந்த சத்யா என்பவருடன் கடந்த 1 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்காக கணேசன் விடுமுறையில் இருந்து வந்தார். அவர் விடுமுறையில் இருந்த போது ராமநத்தம் போலீஸ்நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில் நேற்று காலையில் அண்ணாமலை நகரில் அவர் தங்கியிருந்த வீட்டுக்கு வந்துள்ளார்.
படுகொலை
அங்கு இரவு கழுத்து அறுபட்ட நிலையில் சப்–இன்ஸ்பெக்டர் கணேசன் பிணமாக கிடந்தார். தற்செயலாக அந்த வீட்டுக்கு சென்ற பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு வாலிபர், கொடூரமான முறையில் கணேசன் கொல்லப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக