வியாழன், 10 ஜூலை, 2014

நெதர்லாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது அர்ஜெண்டீனா

சா பாலோ:உலகக் கோப்பை கால் பந்தாட்ட தொடரில் நேற்றைய  இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தியதன் மூலம் இறுதிப் போட்டிக்கு தேர்வானது அர்ஜெண்டீனா.
நேற்றைய போட்டியில் முதல் பாதி ஆட்டம் கோல்கள் ஏதும் அடிக்கப்படாமல் முடிவுக்கு வந்தது. அர்ஜன்டினாவும், நெதர்லாந்தும் சம பலத்தினை வெளிப்படுத்தின. அர்ஜன்டினாவுக்கு கிடைத்த ப்ரீ-கிக் ஒன்றை மெஸ்ஸி அடித்தார். ஆனாலும், அது, நெதர்லாந்து கோல் காப்பாளரினால் தடுக்கப்பட்டது.

போட்டியில்  பந்தினை இரு அணிகளும் தம்முடைய கட்டுப்பாட்டில் சம அளவில் வைத்திருந்தன. ஆனால், கோல் கம்பந்தை நோக்கி அர்ஜன்டினாவே அதிக தடவைகள் பந்தை அடித்திருக்கிறது. போட்டி 0:0 கணக்கில் சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதி ஆட்டமும் கோல்கள் ஏதும் அடிக்கப்படாமல் முடிவுக்கு வந்தது. இரண்டு அணிகளும் கோலடிப்பதற்கான அதீத பிரயத்தனங்களை மேற்கொண்டன. ஆனாலும், பலனளிக்கவில்லை.
இரண்டு அணிகளும் தற்காப்பு ஆட்டங்களில் கவனம் செலுத்தினாலும், பின்னரான ஆட்டத்தில் அர்ஜன்டினா வேகமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. எனினும், நெதர்லாந்து தடுப்பாட்டக்காரர்களைத் தாண்டி கோலடிக்க முடியவில்லை. குறிப்பாக, அர்ஜன்டினாவின் தலைவர் மெஸ்ஸியை நெதர்லாந்து ஆடவே அனுமதிக்கவில்லை என்கிற அளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டிருந்தது. போட்டி 0:0 கணக்கில் சமநிலையில் இருந்ததால் மேலதிக நேர ஆட்டம் வழங்கப்பட்டது
அதிலும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கத் தவறியதால் போட்டி பெனால்டி சூட்டவுட்டுக்குச் சென்றது.  பெனால்டி சூட்டவுட்டில் (தண்டனை உதை) 4:2 என்ற கணக்கில் வெற்றி பெற்று அர்ஜன்டினா இறுதிப் போட்டிக்குள் 5வது தடவையாக நுழைந்துள்ளது. அர்ஜெண்டீனா பந்துக் காப்பாளர் செர்ஜியோ ரொமெரோ இரு கோல் முயற்சிகளை அபாரமாக தடுத்தார். நெதர்லாந்தின் ரொன் வ்லார், வெஸ்லி ஸ்னெயிஜ்டர் ஆகியோரின் கோல் முயற்சிகளே வீணானது.

இதையடுத்து எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ள உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஜேர்மனியை எதிர்கொள்கிறது அர்ஜெண்டீனா. இரு அணிகளும் மூன்று முறை உலக கோப்பை இறுதிப் போட்டியில் சந்தித்துள்ளன.
எதிர்வரும் 12ம் திகதி சனிக்கிழமை உலக கோப்பை தொடரின் மூன்றாவது இடத்தைப் பிடிக்கப் போகும் அணிக்கான போட்டி நடைபெறுகிறது. இதில் பிரேசில் - நெதர்லாந்து அணிகள்  மோதிக் கொள்கின்றன.

ஆனால் இப்படி ஒரு போட்டி நடைபெறக் கூடாது என கடந்த 10 வருடங்களாக ஃபீஃபாவிடம் முறையிட்டு வருவதாக கூறுகிறார் நெதர்லாந்து பயிற்றுனர் லூயிஸ் வான் கால்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக