ஞாயிறு, 29 டிசம்பர், 2013

ரேஷன் கார்டு விவரங்கள் சேகரிப்பு விவரம் தெரியாமல் மக்கள் அலைகழிப்பு

பரங்கிப்பேட்டை:ரேஷன் கார்டுகளில் உள்ள விபரங்களை வருவாய் துறையினர் சேகரிப்பது எதற்கு என்பது தெரியாமல் பொதுமக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பரங்கிப்பேட்டை, கிள்ளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் ஒவ்வொரு கிராமங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஏதாவது பொது இடத்தில் உட்கார்ந்துக் கொண்டு ரேஷன் கார்டு வைத்துள்ள பொதுமக்களிடம் விவரங்கள் சேகரிக்கின்றனர். குறிப்பாக குடும்பத் தலைவரின் பெயர், ஜாதி, வருமானம் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.
இந்த விவரங்கள் இலவச வேட்டி, சேலை வழங்குவதற்குகாகவா அல்லது போலி ரேஷன் கார்டுகளை ஒழிப்பதற்காகவா என்பது யாருக்கும் தெரிவில்லை. விபரங்கள் சேகரிக்கும் கிராம நிர்வாக அலுவலரிடம் விசாரித்தாலும் எங்களுக்கு ஒன்றும் தெரியாது. ரேஷன் கார்டுகளின் விபரங்களை சேகரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர் என கூறி விடுகின்றனர்.
இதற்கிடையில் ஒரு சிலர் விலையில்லா மிக்கி, கிரைண்டர், மின்விசிறி வழங்குவதற்காக கணக்கு எடுக்கிறார்கள் என பேரூராட்சி பகுதி, கிராங்களில் தகவல் பரவியதும் பொதுமக்கள் கூட்டம் ஒவ்வொரு பகுதிகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு சில இடங்களில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்துகிடப்பதால் தள்ளூ, முள்ளு சம்பவங்களும் நடந்து வருகிறது.
இதனால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். ரேஷன் கார்டுகளில் விவரம் சேகரிப்பது சம்மந்தமாக முறையாக வருவாய்துறையினர் அறிவித்து இருந்தால் கூட்டம் நெரிசலில் இருந்து பொதுமக்கள் தவிர்த்து விடுவார்கள்.
போலி ரேஷன் கார்டுகளை ஒழிப்பதற்காக விவரங்கள் சேசரிக்கப்படுகிறது என்றால் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரிடையாக சென்று முறையாக விசாரணை நடத்தி விவரங்கள் சேகரிக்க வேண்டும் என வருவாய் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக