செவ்வாய், 10 டிசம்பர், 2013

கடலூர் கெடிலம் ஆற்றில் நீர் நாய்கள் அண்ணா பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு

கடலூர் : கடலூர், கெடிலம் ஆற்றில் விளையாடிய நீர் நாய்களை வேடிக்கை பார்க்க மக்கள் கூட்டம் கூடியதால், அண்ணா பாலத்தில் போக்குவரத்து பாதித்தது.
கடலூரில் பெண்ணையாறு மற்றும் கெடிலம் ஆறுகளில் சமீபகாலமாக நீர் நாய்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. உணவு தேடி ஆற்றில் நீந்தி வரும் இந்த நாய்கள், ஆற்றில் துள்ளிக் குதிக்கும் மீன்களை லாவகமாக கவ்வி உண்ணுவதும், நீர் நாய்கள் ஒன்றோடு ஒன்று தண்ணீரில் துள்ளிக் குதிப்பதை, மக்கள் ஆற்றங்கரைகளில் ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பார்கள்.
அவ்வாறு நேற்று காலை 11:40 மணி அளவில், கடலூர் அண்ணா பாலத்தின் தென்பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றில் மூன்று நாய்கள் நீரில் துள்ளிக் குதித்து விளையாடின. பின்னர் ஆற்றின் நடுவே உள்ள மணல் திட்டில் விளையாடின.
இதனை வேடிக்கை பார்க்க அண்ணா பாலத்தில் மக்கள் கூட்டம் கூடியது. வாகனங்களில் சென்றவர்கள், தங்கள் வாகனங்களை நிறுத்தி வேடிக்கை பார்த்ததால் போக்குவரது பாதித்தது. ஒரு வழியாக மணல் திட்டில் விளையாடிய மூன்று நீர் நாய்களும் 12:30 மணி அளவில் தண்ணீரில் இறங்கி, கடற்கரையை நோக்கி நீந்திச் சென்றதும், பாலத்தில் மக்கள் கூட்டம் குறைந்து, போக்குவரத்து சீரானது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக