ஞாயிறு, 24 நவம்பர், 2013

பாஸ்போர்ட் பெற அனைத்து சேவை மையங்களிலும் முன்பதிவு அவசியம்

சென்னை:சென்னையில் உள்ள மூன்று பாஸ்போர்ட் சேவை மையங்களிலும் முன்பதிவு மூலமே பாஸ்போர்ட்டுக்கு ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் முறை கட்டாயமாகிறது. இந்த புதிய முறை டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
சாலிகிராமம் பாஸ்போர்ட் சேவை மையத்தில் மூத்த குடிமக்கள் மற்றும்
மாற்றுத்திறனாளிகள் மட்டுமே முன்பதிவு செய்யாமல் பாஸ்போர்ட் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும். தாம்பரத்தில் முன்பதிவு செய்யாமலேயே சேவை மையத்துக்குச் சென்று விண்ணப்பம் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் முறை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. இந்த நடைமுறைகள் அனைத்தும் டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருகின்றன.
இது குறித்து, மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
சென்னையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க மூன்று இடங்களில் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அமைந்தகரை, சாலிகிராமம் மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் இந்த சேவை மையங்கள் மூலம் நாளொன்றுக்கு ஆயிரத்து 628 விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு பாஸ்போர்ட் பெற ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
அதில், இணையதளத்தில் குறிப்பிட்ட தேதியை முன்பதிவு செய்யாமலேயே பாஸ்போர்ட் மையங்களுக்குச் செல்லும் நடைமுறை சாலிகிராமம் மற்றும் தாம்பரம் மையங்களில் செயல்படுத்தப்பட்டு வந்தது. இதற்கு நீண்ட நேரம் ஆவதால் முன்பதிவு செய்யாமலேயே பாஸ்போர்ட்டுக்கு ஆவணங்களை நேரில் சமர்ப்பிக்கும் முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக