அஹ்மதாபாத்: ஐ.பி.எஸ். அதிகாரி டி.ஜி. வன்சாராவின் பரபரப்பை ஏற்படுத்தும் இராஜினாமா கடிதம் வெளியாகியுள்ள சூழலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கைது செய்ய வேண்டும் என்று அரசு சாரா நிறுவனம் ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.
குஜராத் அரசின் உயர்மட்டத்தில் நடந்த சதித் திட்டத்தையே தான் அமல்படுத்தியதாக வன்ஸாரா தனது இராஜினாமா கடிதத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். சதித்திட்டத்தில் பங்குடைய மோடி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களை கைது செய்து குஜராத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று அரசு சாரா நிறுவனமான ஜன் சங்கர்ஷ் மஞ்சின் கன்வீனர் அமரீஷ் பட்டேல் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
இஷ்ரத் ஜஹானுடன் அநியாயமாக போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட ஜாவேத் ஷேக்கின் தந்தை கோபிநாத் பிள்ளைக்காக நீதிமன்றத்தில் வாதாடும் வழக்கறிஞர் முகுல் சின்ஹாவின் தலைமையிலான அரசு சாரா அமைப்புதான் ஜன சங்கர்ஷ் மஞ்ச்.
நரேந்திர மோடி உடனடியாக தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்து அமைச்சரவையை கலைக்க வேண்டும். இல்லையெனில் குடியரசு தலைவர் அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவின் படி மோடி அரசை கலைக்க வேண்டும் என்று அமரீஷ் பட்டேல் கோரிக்கை விடுத்துள்ளார்.
தங்களது கட்சிதாரர்களுக்காக வன்சாராவின் கடிதத்தை சி.பி.ஐ.க்கு அளித்து, மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்த கோருவோம் என்றும் பட்டேல் தெரிவித்துள்ளார். குஜராத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த கோரி அம்மாநில ஆளுநர் கமலா பெனிவாலை சந்திக்கவும் ஜன சங்கர்ஷ் மஞ்ச் திட்டமிட்டுள்ளது.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக