திங்கள், 19 ஆகஸ்ட், 2013

பீகாரில் ரயில் மோதி பலியானோர் எண்ணிக்கை 37 ஆனது! பெட்டிகள் தீ வைத்து எரிப்பு!!

பாட்னா: பீகார் மாநிலத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யாத்ரீகர்கள் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த சக யாத்ரீகர்கள் மோதிய ரயிலின் சில பெட்டிகளுக்கு தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது.பீகாரின் தாமரா ரயில் நிலையத்தில் சாஹர்சா மாவட்டத்தில் உள்ள கோயிலுக்குச் செல்வதற்காக உள்ளூர் ரயில் ஒன்றில் இருந்து யாத்ரீகர்கள் குழுவினர் இறங்கியுள்ளனர். பின்னர் மற்றொரு ரயிலுக்காக தண்டவாளம் அருகேயே சிலர் காத்திருந்தனர். மேலும் சிலர் தண்டவாளத்தைக் கடக்கவும் முயற்சித்துள்ளனர்.

அப்போது சாஹர்சாவிலிருந்து பாட்னா நோக்கி நோக்கி சென்ற ராஜ் ராணி எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் நின்றிருந்தோர் மற்றும் தண்டவாளத்தைக் கடக்க முயன்றோர் மீது அதிவேகத்தில் மோதியது. இதில் பலரது உடல் துண்டு துண்டாக சிதறியது. பலரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில காவல்துறை அதிகாரி எஸ்.கே. பரத்வாஜ், ரயில்வே தண்டவாளத்தை சிலர் கடக்க முயன்றதால் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் நிறுத்தப்பட்ட ராஜ் ராணி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சிலர் தீ வைத்துள்ளனர். அப்பகுதிக்கான சாலை போக்குவரத்து மோசமாக இருப்பதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 37 பேர் வரை பலியாகி இருப்பதாக கூறப்பட்டாலும் உறுதியான எண்ணிக்கை தெரியவில்லை என்றார்.
தற்போது இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனிடையே இச்சம்பவத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரயில்வே நிர்வாகம் தலா ரூ10 லட்சம் வழங்க வேண்டும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தியுள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக