சனி, 18 மே, 2013

காஷ்மீர் - தமிழர் போராட்டங்கள் ஒன்றே .. ஆதரவு தொடரும்! - யாசின் மாலிக்

கடலூர்: காஷ்மீரில் நடைபெறும் விடுதலைப் போராட்டமும் தமிழ் மண்ணில் நடைபெறும் இன விடுதலைப் போராட்டமும் ஒரே மாதிரியானவைதான். தமிழர் போராட்டங்களுக்கு எங்கள் ஆதரவு தொடரும் என்று காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவரும் ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவருமான யாசின் மாலிக் கூறினார்.கடலூரில் சனிக்கிழமை இன்று பிற்பகல் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் உள்ளரங்குக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் யாசின் மாலிக். இது பெரும் அளவிலான அதிர்ச்சி அலைகளை அனைவர் மத்தியிலும் உருவாக்கியுள்ளது.கூட்டத்தில் பேசிய அவர் காஷ்மீர் பிரச்சினையையும் தமிழர்களின் ஈழப் போராட்டத்தையும் ஒரே மாதிரியானவை என்று கூறினார்.அவர் கூறுகையில், "இன விடுதலைக்கான போராட்டங்கள் அவ்வளவு எளிதாக வெற்றி பெறுவதில்லை. அதுபோல், அடக்குமுறைகள் மூலம் இன விடுதலைக்கான போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதுமில்லை. காஷ்மீரில் நடைபெறும் போராட்டமும், தமிழர்களின் போராட்டமும் ஒரே மாதிரியானதுதான். தமிழர்களின் இந்த இன விடுதலைப் போராட்டம் வரவேற்கத்தக்கது. ஜனநாயக முறையில் நடக்கும் இந்தப் போராட்டத்தை ராணுவத்தைக் கொண்டோ. போலீஸைக் கொண்டோ அடக்கி ஒடுக்க முடியாது.தமிழர்களின் போராட்டத்துக்கு எங்கள் ஆதரவு தொடரும்," என்று பேசினார் யாசின் மாலிக்.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக