சனி, 1 ஆகஸ்ட், 2015

இணையதளம் மூலம் சிட்டா மற்றும் ‘அ’ பதிவேடுகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் கலெக்டர் சுரேஷ்குமார் தகவல்

கடலூர்:இணையதள சேவைகள் மூலம் சிட்டா மற்றும் ‘அ’ பதிவேடுகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என கடலூர் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
சிட்டா, ‘அ’ பதிவேடு
கடலூர் மாவட்டத்தில் அனைத்து தாலுகாக்களிலும் உள்ள நில உடமைதாரர்களின் பெயர், புல எண்கள், பரப்பு உள்ளிட்ட விபரங்கள், நில அளவை ஆவணங்கள் கணினிமயமாக்கும் திட்டத்தின் கீழ் தமிழ் நிலம் மென்பொருள் மூலம் தாலுகா அலுவலகங்களில் உள்ள கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தாலுகா அலுவலகங்களில் கையால் எழுதப்பட்டு, வழங்கப்பட்டு வந்த சிட்டா மற்றும் ‘அ’ பதிவேடுகள் தடை செய்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் தாலுகா அலுவலகங்களில் கணினி மூலம் சிட்டா மற்றும் ‘அ’ பதிவேடுகள் பெற்று வந்துள்ளனர். தற்போது தாலுகா அலுவலகங்களில் கணினி சிட்டா நகல்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்டு வருகிறது.
இணையதள வழி சேவை
நில உடமை ஆவணங்களை edistrict.gov.in/eservicesnew/index.html என்ற இணையதள வழி சேவைகள் மூலம் எங்கிருந்தும், எந்த நேரத்திலும் பெற்றுக்கொள்ளலாம். தற்போது பொது சேவை மையங்களிலும் கணினி சிட்டா மற்றும் ‘அ’ பதிவேடுகள் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இந்த கணினி சிட்டா மற்றும் ‘அ’ பதிவேடுகளில் அரசு அலுவலரின் கையொப்பம் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட வட்ட அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தாரிடம் இலவசமாக கையொப்பம் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக