புதுடெல்லி: சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து முழுவதுமாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ள அதி நவீன க்ரையோஜினிக் என்ஜின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி-டி5 ஏவு வாகனத்திலிருந்து ஒரு செயற்கைக்கோள் நேற்று ஞாயிறு மாலை 4.18 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
விண்ணில் செலுத்தப்பட்டு 17 நிமிடங்களுக்குப் பின்னர் ஜி-சாட்-14 தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை டி5 விண்ணில் செலுத்தியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோவின் தலைவர் கே இராதாகிருஷ்ணன், தங்கள் குழுவின் அர்ப்பணிப்பிற்கு மேலுமொரு வெற்றி இது என்றார்.
இஸ்ரோவின் வரலாற்றில் இது இன்னுமொரு மைல்கல் என்று கருதப்படுகிறது. கடந்த 2010ல், முதலில் ஏப்ரலிலும் பின்னர் டிசம்பரிலும் இருமுறை க்ரையோஜினிக் ஏவுகணைகளை செலுத்துவதில் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இஸ்ரோ தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.
அந்த அளவில் இன்றைய வெற்றி மிக இனிமையானது என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள். 356 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட டி-5 ராக்கெட் பயணம் வெற்றிகரமாக அமைந்துவிட்டால் இன்னும் கனமான ஏவுகணைகளை இந்தியாவால் ஏவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக