சனி, 14 டிசம்பர், 2013

கடலூர் மாவட்டத்தில், கடலோரக் கிராமங்களை விழுங்கும் கடல் அரிப்பு!


கடலூர் :கடல் அரிப்பு காரணமாக, கடலூர் மாவட்டத்தில், 7 கடலோரக் கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் இருப்பதாக ஒருங்கிணைந்த கடற்கரை மற்றும் கடல்சார் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
 கடலூர் மாவட்டத்தில் நல்லவாடு தொடங்கி சிதம்பரம் வரை சுமார் 50 கி.மீ. தொலைவுக்கு 40-க்கும் மேற்பட்ட கடலோரக் கிராமங்கள் உள்ளன. 2004-ல் சுனாமி பேரலையைத் தொடர்ந்து கடலில் ஏற்பட்ட அசாதாரண மாற்றம், இப்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடல் அரிப்பால் கடந்த 10 ஆண்டுகளில் அரை கிலோ மீட்டர் தூரம் கடல் கிராமத்தை நோக்கி நகர்ந்து வந்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். 
 கடலூர் மாவட்டத்தில் சித்திரப்பேட்டை, தம்மணாம்பேட்டை, நாயக்கர்பேட்டை, நஞ்சலிங்கம்பேட்டை, பெரியக்குப்பம், பேட்டோடை, அய்யம்பேட்டை உள்ளிட்ட 7 கிராமங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
 பல சமயங்களில் கடல் அலைகள் மீனவ கிராமங்களில் உள்ள வீடுகளின் சுவர்கள் மீது மோதும் அளவுக்கு மிக நெருக்கமாக வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் கடல் மேலும் முன்னேறி வருமானால் 7-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் ஊரையே காலி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.
மீனவ கிராமங்களின் வீடுகள் அபாயத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல், மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக் குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
படகுகளை நிறுத்த இடமில்லை: ஊருக்கும், கடலுக்கும் இடையே இருக்கும் கடற்கரையில்தான் மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்தி, வலைகளைப் பாதுகாப்பாகவும் வைத்திருந்தனர். ஆனால், தற்போது அந்த இடைப்பட்ட நிலப்பரப்பை கடல் கபளீகரம் செய்துவிட்டதால் படகுகளை நிறுத்த இடமில்லை என்கின்றனர் மீனவர்கள்.
கடல் அரிப்பு அதிகமாக உள்ள பெரியக்குப்பம் கடற்கரை பகுதியில் இரண்டு தனியார் நிறுவனங்கள் சொந்தப் பயன்பாட்டுக்காக சிறிய அளவில் இரண்டு துறைமுகங்களை அமைத்துள்ளன. இந்த இரண்டு துறைமுகங்களுக்கு இடையேதான் பாதிப்புக்குள்ளான இந்த ஏழு கிராமங்களும் உள்ளன.
 இந்த இரண்டு துறைமுகங்கள் கடல் அலைகளை அதன் போக்கில் விடாமல் தடுக்கின்றன. இதனால், கடல் அலைகள் குறிப்பிட்ட குறுகலான பகுதியில் மட்டும் வேகமாக வந்து மோதுவதால் மண் அரிப்பு வேகமாக ஏற்படுகிறது என்பது மீனவர்களின் குற்றச்சாட்டு.
 இந்நிலையில் மத்திய அரசின் புவி அறிவியல் துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த கடற்கரை மற்றும் கடல்சார் மேலாண்மை நிறுவனம், கடல் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஆய்வை அண்மையில் தொடங்கியது.
இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வு, முதல் கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையோரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வுக் குழுவினர், வெள்ளிக்கிழமை கடலூர் மாவட்டத்தில் உள்ள கடற்கரையோர கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
 இந்த ஆய்வு குறித்து அந்த குழுவினரிடம் கேட்டபோது, கடல் சூழலால் கடலோர கிராமங்களில் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆய்வுப்பணி 3 ஆண்டுகளில் நிறைவடையும். கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை தேவனாம்பட்டணம், பெரியகுப்பம் பகுதியில் 7 கிராமங்களில் கடல் அரிப்பு அதிகமாக உள்ளது. கற்களை கொட்டியோ அல்லது தடுப்புச் சுவர் அமைத்தோ இங்கு கடல் அரிப்பை தடுக்கலாம் என புவி அறிவியல் துறைக்கு பரிந்துரை செய்ய உள்ளோம் என்றனர். 
 கடல் நீரோட்டத்தை தடுத்து அமைக்கப்படும் துறைமுகங்களினால் கடல் சூழல் மாறுபட்டு, மீனவர்களின் பாரம்பரிய வாழ்விடங்களை கடல் கபளீகரம் செய்து வருகிறது.  
ஆய்வில் அச்சம் தெரிவித்துள்ள கடலோர கிராமங்களை பாதுகாக்க உறுதியான செயல்திட்டத்தை அரசு விரைவில் அறிவிக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கையெடுக்க வேண்டும் என்பதே மீனவ மக்களின் எதிர்பார்ப்பு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக