செவ்வாய், 10 டிசம்பர், 2013

நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல்: காங்கிரஸை கைவிட்ட மக்கள்! சாதித்துக் காட்டிய கெஜ்ரிவால்

புதுடெல்லி: சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நான்கு மாநிலங்களில் மூன்றிலும் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியான மத்திய பிரதேசம், சட்டீஷ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தனிப் பெரும்பான்மையுடன் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.
அதே வேளையில், ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியால் டெல்லியில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க., தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் ஆட்சி அமைக்க தேவையான 36 இடங்களை பெற அக்கட்சியால் இயலவில்லை.
ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் எதிர்பார்த்தது போலவே சிவராஜ் சிங் சவுகானின் தலைமையில் பா.ஜ.க., பெரும்பான்மையுடன் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது.
கடுமையான போராட்டத்தின் இறுதியில் ரமண் சிங்கின் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி சட்டீஷ்கரில் ஆட்சியை தக்க வைத்துள்ளது. மன்மோகன் சிங் அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு கிடைத்த பலத்த அடியே நான்கு மாநில தேர்தல் முடிவுகள்.
சாதாரண மக்களை நேரடியாக பாதிக்கும் விலைவாசி உயர்வு, மானியங்களை வெட்டிக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் பதிலளித்துள்ளார்கள். காங்கிரஸுக்கும், பா.ஜ.க.வுக்கும் எதிராக மாற்று அரசியல் கட்சி சாத்தியமே என்ற செய்தியை டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி கூறுகிறது.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மாற்று அரசியல் சக்தியாக வெற்றியை ஈட்டிய போது இதர மாநிலங்களில் மாற்று அரசியல் கட்சி இல்லாததால் பா.ஜ.க. பெரும் வெற்றியை அங்கெல்லாம் குவிக்க முடிந்தது.
ஆம் ஆத்மி கட்சி முற்றிலும் உள்ளூர் பிரச்னைகளையே ஷீலா தீட்சித் அரசுக்கு எதிராக மக்கள் முன்னால் வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டது. 15 ஆண்டுகளாக ஆட்சியை நடத்தி வரும் காங்கிரஸ் கட்சி, வெறும் 8 இடங்களுக்கு தள்ளப்பட்டது பரிதாபகரமானது.
ராஜஸ்தானில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள இயலாமல் வெறும் 21 இடங்களை மட்டுமே பெற்று கடுமையான பின்னடைவை காங்கிரஸ் கட்சி சந்தித்துள்ளது. தேர்தல் நடைபெற்ற 199 இடங்களில் 162 இடங்களை கைப்பற்றி பெரும் வெற்றியை வசுந்தராஜே சிந்தியா தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி பெற்றுள்ளது.
230 உறுப்பினர்களை கொண்ட மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி 166 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி 58 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்துள்ளது.
ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நடைபெற்ற சட்டீஷ்கரில் 49 இடங்களை கைப்பற்றி பாரதீய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. வாக்குகள் எண்ணிக்கையின் மத்தியில் காங்கிரசுக்கு நம்பிக்கை ஏற்பட்ட போதிலும் இறுதியில் 39 இடங்களையே அக்கட்சியால் கைப்பற்ற முடிந்தது.
எனினும் ஓரளவு ஆறுதலை தரும் வெற்றியை சட்டீஷ்கரில் காங்கிரஸ் பெற்றுள்ளது. தேர்தல் நடைபெற்ற மிசோராம் மாநிலத்தில் இன்று வாக்குகள் எண்ணப்படும்.
 
சாதித்துக் காட்டிய அரவிந்த் கெஜ்ரிவால்
 
டெல்லி சட்டமன்ற தேர்தலில் 28 இடங்களில் வெற்றி பெற்ற பின் அங்கு மூன்றாவது பெரிய அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி. இதை ஒரு பொருட்டாக ஏற்க மறுத்த காங்கிரஸ் மற்றும் பாஜக இதைப் பார்த்து பயப்பட வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.
ஹரியானாவைச் சேர்ந்த அர்விந்த் கெஜ்ரிவால் இந்திய வருவாய் துறையின் உயர் பதவியில் இருந்தவர். உபி மாநிலம் காஜியா பாத்தில் பணியாற்றினார்.
லோக்பால் மசோதாவை அமல்படுத்த வேண்டி உண்ணாவிரதம் மேற்கொண்ட அண்ணா ஹசாரேவுடன் நெருக்கமாகப் பணியாற்றினார். இதற்காக தம் பதவியில் இருந்து கட்டாய ஓய்வு பெற்றவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக பல ஊழல்களை வெளிப்படுத்தினார். அதனால் கிடைத்த செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியல் கட்சியைத் தொடங்க எண்ணியவருக்கு அண்ணா ஹசாரே அனுமதிக்கவில்லை.
இதனால், அவருடன் இருந்து விலகி ஆம் ஆத்மி எனும் பெயரில் அரசியல் கட்சியை உருவாக்கி முதன் முறையாகத் தேர்தலை டெல்லியில் சந்தித்தார் கெஜ்ரிவால். இவருக்கு துவக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்த அண்ணா ஹசாரே தற்போது வாழ்த்து கூறும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் கெஜ்ரிவால் டெல்லியின் முதல் அமைச்சர் ஷீலாவுக்கு மட்டும் எதிரி என்பது போல் கருதப்பட்டார். ஷீலாவின் ஒவ்வொரு நடவடிக்கையையும் விமர்சனம் செய்தார். பின்னர் பாஜகவையும் கண்டிக்கத் துவங்கினார். இதனால், அவர் டெல்லி தேர்தலில் யாருடைய வாக்குகளைப் பிரிப்பார் என்ற குழப்பம் நீடித்தது.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை வெளியான ஒரு புள்ளி விவரம் கூறுகையில், 'டெல்லியில், கிழக்கு, மேற்கு, வடமேற்கு பகுதிகளில் வலுவாக இருந்த காங்கிரஸ் வாக்குகளை ஆம் ஆத்மி தட்டிப் பறித்துள்ளது. புதிதாக ஓட்டுரிமை பெற்ற சுமார் 4.6 லட்சம் மற்றும் நடுத்தர வாக்காளர்களில் பலரும் ஆம் ஆத்மிக்கு வாக்களித்துள்ளனர். இதனால், அது முதன் முறையாக போட்டியிட்டு மொத்தம் 31 சதவிகிதம் வாக்குகள் பெற்று சாதனை படைத்துள்ளது' எனக் கூறுகிறது.
இக்கட்சி தன் பிரச்சாரங்களின் போது ஆங்காங்கே சிறு சிறு கூட்டங்களை மட்டும் நடத்தியது தவிர, பெரிய அளவிலான பொதுக்கூட்டம் ஒன்றைக் கூட நடத்தவில்லை. 'துடைப்பம்' சின்னத்தை உயர்த்தி வெற்றியைக் கொண்டாடும் ஆம் ஆத்மி கட்சியினர்.
 

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக