சனி, 2 நவம்பர், 2013

கடலூர் மாவட்டத்தில ஆபரேசன் ஹம்லா:போலீஸார் பாதுகாப்பு ஒத்திகை


கடலூர் :கடலூர் மாவட்டத்தில ஹம்லா ஆபரேசன் என்ற பெயரில் போலீஸார் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர். கடலூர் துறைமுகத்தில் போலீஸார் நடத்திய சோதனையின் போது தீவிரவாதிகள் போல் வந்த 8 பேர் பிடிபட்டனர்.
தமிழக கடலோர மாவட்டங்களுக்குள் தீவிரவாதிகள் கடல்வழியாக ஊடுருவுவதைத் தடுப்பதற்காக ஆண்டுதோறும் போலீஸார் ஹம்லா ஆப்ரேஷன் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
தீவிரவாதிகள் போன்று வேடமணிந்து கடல் வழியாகவோ அல்லது சாலை வழியாகவோ ஊடுருவி வரும் போலீஸாரை கடற்கரையோரம் பாதுகாப்பில் இருக்கும் போலீஸார் பிடிக்க வேண்டும். இதுவே ஹம்லா ஆப்ரேஷன் என்று அழைக்கப்படுகிறது.
ஹம்லா ஆப்ரேஷன் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி புதன்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி, வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு முடிந்தது. கடலூர் மாவட்டத்தில் கடலோர பகுதிகளான பரங்கிப்பேட்டை, அன்னங்கோவில், கிள்ளை, சாமியார்பேட்டை உள்ளிட்ட பகுதியில் போலீஸார் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த பாதுகாப்பு ஒத்திகையில், போலீஸார் ஈடுபட்டபோது கடலூர் துறைமுகம் அருகே ராசாப்பேட்டையில் உள்ள கடல் பகுதிக்கு பெரிய படகுடன் சேர்ந்து ஒரு சிறிய படகும் வந்தது. பெரிய படகில் வந்த 5 பேர் சிறிய படகில் ஏற முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் தலைமையிலான போலீஸார் அவர்களை மடக்கி பிடித்தனர்.
அவர்களை விசாரித்த போது அவர்கள் 4 பேரும் பரங்கிப்பேட்டைக்கு தீவிரவாதிகள் போல் மாறு வேடத்தில் செல்ல இருப்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 3 போலி வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் அதே பெரிய படகில் வந்த 4 பேர் மற்றொரு சிறிய படகில் புதுச்சேரி செல்வதற்காக கடலூர் துறைமுகத்துக்கு வந்தனர். அவர்களை கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், எஸ்.ஐ. சிவகுருநாதன் ஆகியோர் தலைமையிலான போலீஸார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 3 போலி வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
photo:file

0 கருத்துகள்:

கருத்துரையிடுக