திங்கள், 28 அக்டோபர், 2013

ஆந்திரா, ஓடிசா கனமழை: பலி 55ஆக உயர்வு... லட்சக்கணக்கானோர் தவிப்பு

ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் ஒடிசாவில் பெய்து வரும் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. மழை வெள்ளத்தினால் லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.ஆந்திராவில் கடந்த 5 நாட்களாக பெய்து வரும் கனமழையால் 9 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஐந்தரை லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசமடைந்துள்ளன.
பிரகாசம், ஐதராபாத், குண்டூர் உள்ளிட்ட 9 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கனமழைக்கு 32 பேர் பலியாகி உள்ளனர்.இதேபோல், ஒடிசாவில் 16 பேரும், மேற்கு வங்கத்தில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர்

ஒடிஷாவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. லட்சக்கணக்கானோர் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர்
 
லட்சக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. 3 மாநிலங்களிலும் நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், அடுத்த 48 மணிநேரத்திற்கு பலத்த மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக