வெள்ளி, 15 ஜூன், 2012

கடலூரில் கிடப்பில் போடப்பட்ட லாரன்ஸ் ரோடு சுரங்கப்பாதைப் பணி ரயில்வே நிர்வாகம் துவக்கியது.

கடலூர்:கடலூரில் கிடப்பில் போடப்பட்ட சுரங்கப்பாதைப் பணியை ரயில்வே நிர்வாகம் துவக்கியது.கடலூர் லாரன்ஸ் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சுரங்கப்பாதை வேண்டுமென பொது நல அமைப்புகள் போராடின.ரயில்வே சுரங்கப்பாதை திட்டப் பணியை செயல்படுத்த நெடுஞ்சாலை துறைக்கு கடந்த 2009ம் ஆண்டு இறுதியில் 22.44 கோடி ரூபாயை தமிழக அரசு  ஒதுக்கியது.ரயில்வே நிர்வாகம் சுரங்கப்பாதை பணிக்கு 2.47 கோடி ரூபாயிற்கு கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி டெண்டர் விட்டது. இணைப்பு சாலைக்கு 4.50 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த 11.2.2011ல் நெடுஞ் சாலை துறை டெண்டர் அறிவித்த நிலையில், கடலூர் அனைத்து வியாபார சங்கங்களின் பேரவை செயலர் ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றார். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தடை உத்தரவை ரத்து செய்ததால், லாரன்ஸ் ரோட்டில் உள்ள பிரதான இரண்டு குடிநீர் குழாய்களை அகற்ற கடலூர் நகராட்சி நிர்வாகம் கடந்த ஜூலை 13ம் தேதி 1.85 கோடி ரூபா#க்கு டெண்டர் விட்டது.கடந்த செப்டம்பர்16 ம் தேதி ரயில்வே சுரங்கப்பாதை பணி துவங்கியது. லாரன்ஸ் ரோட்டில் உள்ள பிரதான குடிநீர் குழாயை அகற்றி, தண்டவாளத்திற்கு கீழே கொண்டு செல்ல ரயில்வே நிர்வாகம் அனுமதியளிக்காததால் குடிநீர் குழாய் அகற்றும் பணி தடைபட்டது.இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் கடந்த பிப்ரவரி 15ம் தேதி லாரன்ஸ் ரோட்டில் கேட்டிற்கு கிழக்கு பகுதியில் 200 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலம் மற்றும் 21 அடி ஆழத்திற்கு பொக்லைனால் பள்ளம் தோண்டத் துவங்கியது.

அப்போது நகராட்சி பிரதான குடிநீர் குழாய் உடைந்ததால் பணி நின்றது. நகராட்சி நிர்வாகம் குடிநீர் குழாயை அகற்றினால் மட்டுமே பணியை துவங்க முடியும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதனால் நெடுஞ் சாலை துறை இணைப்பு சாலை பணிக்கு டெண்டர் விட்டும் பணி துவங்க குடிநீர் குழாயை ரயில் பாதைக்கு கீழாக கொண்டு செல்ல ரயில்வே நிர்வாகம் அனுமதியளிக்க வில்லை என நகராட்சி நிர்வாகமும், நகராட்சி நிர்வாகம் அனுமதியே கேட்கவில்லை என ரயில்வே நிர்வாகமும் குற்றம் சாட்டின.ஒரு வழியாக கடந்த மாதம் 15ம் தேதி லாரன்ஸ் ரோட்டில் உள்ள குடிநீர் குழாயை மாற்று வழியில் கொண்டு செல்லும் பணியை நகராட்சி துவக்கியது. அதில் வண்டிப்பாளையம் ரோடு, பான்பரி மார்க்கெட் வழியாக ரயில்வே பாதையை கடந்து பஸ் நிலையம் பின்புறம் வழியாக மீண்டும் லாரன்ஸ் ரோட்டில் உள்ள பிரதான குழாயுடன் இணைக்கும் பணி நேற்று நடந்தது.ரயில்வே கேட் பகுதியில் உள்ள குடிநீர் குழாய்கள் துண்டிக்கப்பட்டதால் நேற்றிரவு  10 மணிக்கு சுரங்கப்பாதை பணியை ரயில்வே நிர்வாகம் துவக்கியது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக